பூசாரி ஒருவரிடம் சிகிச்சை பெறுவதற்குச் சென்ற பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று அனுராதபுரம் கடுகெலியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் – நெல்லிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெண் பூசாரியிடம் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக தனது கணவனுடன் நேற்று கடுகெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள பூசாரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு சிகிச்சையளிக்கும் போது அவர் சிரமத்தினை எதிர்கொண்டிருந்ததாக அவரது கணவர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணை பூசாரி தேசிக்காய் ஒன்றை விழுங்க வைத்துள்ள நிலையில், அந்த பெண் மயக்கமுற்றுள்ளார். மயக்கமுற்றவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்ட போதும் பூசாரி அதனைத் தடுத்ததாக கணவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இன்று காலை அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும்,மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பூசாரி மற்றும் மேலுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.