யாழில் பணத்திற்கு சூது விளையாடிய 7 பேர் கைது

யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து பணத்திற்கு சூது விளையாடிய 7 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார்
தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு கைதான 7 பேரும் கிளிநொச்சி, சுன்னாகம், யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர்களின் மோட்டார் சைக்கிள் நான்கும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். அத்துடன் சூது விளையாடுவதற்கு தயாராக வைத்திருந்த 2 இலட்சத்து 39ஆயிரத்து 500 ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் நீண்டகாலமாக பணத்திற்கு சூது விளையாடுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இது தொடர்பில் அப் பகுதியினை சுற்றி வளைத்த்த பொலிஸார் சந்தேக நபர்கள் 7 பேரையும் கையும் மெய்யுமாக பிடித்தனர்.

இவ் வீட்டில் சூது விளையாடும் ஒவ்வொரு நாளுக்கும் வீட்டினை பராமரித்து வரும் அயலவர் ஒருவர் தினமும் 5ஆயிரம் ரூபா வாடகை பெற்று வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபரில் ஒருவர் தான் சூது விளையாடிய 20 வருடங்களில் 3 ½ கோடி ரூபா பணத்தினை இழந்துள்ளதாகவும், அதனை மீட்கவே தொடர்ச்சியாக விளையாடுவதாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், சான்றுப் பொருட்களையும் யாழ். நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.