இணுவில் பகுதியில் இருவர் மீது வாள் வெட்டு

இணுவில் கந்தசாமி கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த முகமுடிக் கொள்ளையர்கள் அங்கிருந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான சிகாமணி சுகந்தன் (வயது38) என்பவரின் இரு முழங்கால்களும் வாள்வெட்டுக்கு இழக்காகிய நிலையில், குறித்த யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள்வெட்டில் காயமடைந்தவரின் சகோதரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிரட்டி 35 பவுண் நகை மற்றும் 40,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து செல்ல முற்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் அபாயக்குரல் எழுப்பவே, அங்கிருந்த நபர் தனது சகோதரியின் வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கு நின்ற கொள்ளையர்கள் ஓடிச்சென்றவர் மீது சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை இணுவிலில் இன்னுமொரு வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிலுக்கு சென்று வந்த இளைஞனை, இணுவில் துரை வீதியில் இடைமறித்த இளைஞர்கள் சிலர், நேற்று வியாழக்கிழமை (03) வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உடுவில் கிழக்கு செட்டி வீதியினை சேர்ந்த விஜயரஞ்சன் சுரேஸ் (வயது 24) என்பவரே கழுத்தில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்