நள்ளிரவு வேளை கைதடி கிழக்கில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

வீட்டிலுள்ளோர் ஆழ்ந்த உறக்கத்தில்  இருந்த வேளையில் விசமிகள் சிலர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை எறிந்துள்ளனர்.

இந்தச்சம்பவம் கடந்த சனிக்கிழமை  நள்ளிரவு  கைதடி கிழக்கில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் குறித்து தெரிய வருவது,
வீட்டிலுள்ளோர் உணவருந்தி விட்டு நித்திரைக்குச் சென்று விட்டனர் என்றும் நள்ளிரவு வேளை வீதியால் வந்த விசமிகள் சிலர் பெற்றோல் நிரப்பிய போத்தலில் திரியை வைத்துக் கொளுத்தி வீட்டின் மீது எறிந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் ஒரு போத்தல் சுவரில் தொங்கிய படத்தின் மீது பட்டு எரியாமல் கீழே வீழ்ந்து உடைந்தது என்றும் மற்றைய போத்தல் வீட்டிலுள்ள பிள்ளைகளின் பாடசாலைப் புத்தகங்கள் மீது  வீழ்ந்து எரிந்தது என்றும் அதனால் பாடசாலைப் புத்தகங்கள் எரிந்து நாசமாகின என்றும் தெரிவிக்கப்பட்டது.

காலை நித்திரையால் எழுந்த போதே வீட்டிலுள்ளோர் சம்பவம் பற்றி அறிந்துள்ளதுடன், அதையடுத்து  சாவகச்சேரி பொலிஸில் இதுகுறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயங்களையும் சேகரித்துச் சென்றுள்ளனர்.