1982ம்
ஆண்டு தொடக்கம் வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு
மாவட்டம் தண்ணி முறிப்பு பகுதி குருந்தூர் மலையில் உள்ள சிவன் ஆலயத்தில்
மக்கள் நேற்று மீண்டும் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகவும், பக்தி பூர்வமாகவும் வழிபாடுகளை
மேற்கொண்டுள்ளதுடன் குறித்த ஆலயத்தை பாதுகாத்து கொடுக்குமாறும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவின் குமழமுனை கிராமத்தை அடுத்து பெரும் காட்டுப்பகுதியை
ஒட்டியதாக தண்ணி முறிப்பு கிராமம் அமைந்துள்ளதுடன், யுத்த காலத்தில் மக்கள்
இடம்பெயர்ந்த நிலையில் அங்கு மீளக்குடியேற முடியாத நிலையில்
இருக்கின்றனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுடைய வழிபாட்டு இடமாகவும், முல்லைத்தீவு –
தண்ணி முறிப்பு பகுதியில் தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கான
களமாகவும் குறித்த குருந்தூர் மலை சிவன் ஆலயம் அமைந்திருந்தது.
இவ்வாறான நிலையில், இன்று மக்கள் ஆலயத்தில் பொங்கல் வைத்து பூசை வழிபாடுகளை செய்வதற்காக சென்றிருந்தனர்.
இதன்போது மக்களுடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும்
மாகாணசபை உறுப்பினர் சிவநேசன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.குறித்த
குருந்தூர் மலை முழுமையாக வனப்பகுதியாகும். அந்த வனப்பகுதிக்குள் மிகுந்த
சிரமத்திற்கும் மத்தியில் நுழைந்த மக்கள் ஆலயம் இருக்கும் இடத்தை தேடிக்
கண்டு பிடித்து, பூசை வழிபாடுகளை மிகவும் உணர்வுபூர்வமாக செய்திருந்ததை காண
முடிந்தது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=331344231930772962#sthash.BevRtBHZ.dpuf