யாழ். புங்குடுதீவில் மாணவி சடலமாக மீட்பு! மாணவர்கள் வீதி மறியல் போராட்டம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த மாணவியின் மரணத்துக்கு நீதி கோரி புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக வீதி மறியல் போராட்டத்தை சக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

புங்குடுதீவு 4 வட்டாரம் – கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுப் புதன்கிழமை பாடசாலை விட்டதும் வீடு திரும்பிய மாணவி வீட்டுக்கு வராத நிலையில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந் நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.