10 மாதக் குழந்தை விழுங்கிய ஊசியை போராடி எடுத்த மருத்துவர்கள்

அரக்கோணத்தை அடுத்த மாடத்துக்குப்பம் பகுதியை சேர்ந்த பாண்டியன் – கோகிலா தம்பதியருக்கு அந்த அனுபவம் நிகழ்ந்தது கடந்த வாரம்.
அவர்களின் 10 மாத குழந்தை ஸ்ரீதிவ்யா, சேப்டி பின் எனப்படும் கூர்மையான ஊக்கை தவறுதலாக விழுங்கிவிட, அடுத்த 24 மணிநேரம் அவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டமாகி விட்டது. குழந்தை
விழுங்கிய திறந்த நிலையிலான சேப்டி பின், குழந்தையின் இரைப்பையில் நின்ற நிலையில் இருக்க, குழந்தையின் உயிரை மீட்பது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாகிவிட்டது.
இருப்பினும் சவாலை வெற்றிகரமாக சமாளித்து சாதனையாக்கி இருக்கிறார்கள் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள். வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டு புதிய முறையிலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதை சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் அரசு மருத்துவமனை மேற்கொண்ட முதல் முயற்சி என்பதும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.
அறுவை சிகிச்சை செய்த சோர்வில் குழந்தை ஸ்ரீதிவ்யா கிடக்க, அருகிலிருந்த தாய் கோகிலாவிடம் பேசி னோம்.
“ போன 24 ம் தேதி நைட்டு குழந்தைக்கு பால் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு கரண்ட் போயிடுச்சு. இருட்டில் பால் கொடுக்கக் கூடாதுன்னு இறக்கி படுக்க வெச்சிட்டு சிம்னி விளக்கை ஏத்திவெச்சிட்டு சமையலறைக்கு போனேன். கொஞ்சநேரத்துல குழந்தை அழுற சத்தம் கேட்டு ஓடிவந்தேன். வழக்கத்துக்கு மாறா அதிக சத்தத்தோடு அழுதாள். என்னன்னவோ பண்ணி சமாதானப்படுத்தியும் அழுகைய நிறுத்தலை.
என்னவோ ஏதொன்னு பயந்து திருவள்ளுர் ஜி.எச் க்கு தூக்கிட்டு ஓடினோம். டாக்டர்கள் உடனே எக்ஸ்ரே எடுக்கச்சொன்னாங்க. அப்போதான் குழந்தை சேப்டி பின்னை விழுங்கினது தெரிஞ்சது. அலறி துடிச்சிட்டோம். ‘குழந்தையை உடனே சென்னைக்கு கொண்டு போகறதுதான் பாதுகாப்பு’ னு டாக்டர்கள் சொன்னாங்க. அந்த நைட்டு நேரத்துல வண்டியை பிடிச்சி பேபி ஆஸ்பிட்டலுக்கு வந்தோம்.
திரும்ப இங்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துப்பார்த்துட்டு, டாக்டர்கள் அதை உறுதிப்படுத்திட்டு உடனே ஆபரேஷன் பண்ண ரெடியானாங்க. ஆபரேஷன் நடந்த அந்த அரை மணிநேரம் எங்களுக்கு உயிர் இல்ல. டாக்டருங்க குழந்தையை பாதுகாப்பா வெளியே கொண்டு வந்தபிறகுதான் போன உயிர் எங்களுக்கு வந்தது. டாக்டருங்க என் பிள்ளைக்கு 2 வது முறை உயிர் கொடுத்திருக்காங்க” என்றார் நா தழுதழுக்க.
நடுஇரவில் குழந்தையை காக்கும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பேராசிரியர் எஸ்.வி செந்தில்நாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு. மருத்துவர்கள் ஜெ.முத்துக்குமரன், கிருஷ்ணன், அனிருதன், குருபிரசாத், கௌரிசங்கர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றவர்கள்.
மருத்துவர் முத்துக்குமரனிடம் பேசினோம்.
“ ஒரு சாதனை புரிந்தோம் என்பதைவிட ஒரு குழந்தையின் உயிரை காத்துவிட்டோம் என்பதுதான் இப்போத எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது. கடந்த 24 ம் தேதி இரவு குழந்தை ஸ்ரீதிவ்யாவை அழைத்துவந்தனர் அவளது பெற்றோர். அழுதபடியே இருந்த குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவள் சேப்டி பின்னை விழுங்கியிருந்தது தெரிந்தது. திறந்தநிலையில் இருந்த அந்த சேப்டி பின், முந்தைய முயற்சிகளின்போது தொண்டையிலிருந்து நழுவி, வயிற்றின் இரைப்பையில் ஆபத்தான இடத்தில் சிக்கிக்கொண்டிருந்தது.
காது, மூக்கு, தொண்டை நிபுணர் மற்றும் குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் உதவியை நாடினோம். ஆனால் அதில் சிக்கல் எழுந்தது. காரணம் குழந்தைகள் இப்படி விழுங்குவது சகஜமென்றாலும், ஸ்ரீதிவ்யா 10 மாதமே ஆன குழந்தை என்பதும், சேப்டி பின் திறந்த நிலையில் இருந்ததுமே.
இது எங்கள் மருத்துவ குழுவுக்கு பெரும் சவாலானதாகிவிட்டது. இப்படிப்பட்ட சமயங்களில் ஓஸ்கோபி (o’scopy) எனப்படும் வழக்கமான முறையில் டியூப்பை தொண்டை வழியே செலுத்தி விழுங்கிய பொருளை எடுப்போம். ஆனால் 10 மாத குழந்தையிடம் அதை முயற்சித்தால் திறந்த நிலையில் இருக்கும் சேப்டி பின், அருகிலுள்ள உறுப்புகளை கிழித்து இரத்தக் கசிவு ஏற்பட்டு குழந்தை உயிரிழக்கும் அபாயமுள்ளது.
அதே சமயம் 10 மாத குழந்தை என்பதால் எந்த அளவிற்கு டியூப்பை உள்ளே செலுத்த முடியும் என்பதில் சந்தேகம் இருந்தது. அதனால் அந்த முடிவை கைவிட்டு எங்கள் மருத்துவ குழு தீவிரமாக கலந்தாலோசித்தது.
அதன்பிறகுதான் சிஸ்டோஸ்கோப்பி என்ற புதிய முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். இந்த முறையில் அறுவை ( cystoscopy) சிகிச்சை செய்வது இந்த மருத்துவமனைக்கு இதுதான் முதன்முறை. முடிவெடுத்தபின் கொஞ்சமும் தாமதிக்காமல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். சிஸ்டோஸ்கோபி முறையில் வயிற்றின் குறுக்கே கிழித்து அதன் வழியே இரைப்பையில் 5 மிமீ அளவுக்கு சிறு ஓட்டை ஏற்படுத்தினோம். குழந்தை இரவு முதல் எதுவும் உண்ணாமல் இருந்ததால் இரைப்பை சுருங்கி பின் இறுக்கமான நிலையில் சிக்கியிருந்தது.
ஒருவகையில் உணவு எடுக்காமல் இருந்ததும் இம்மாதிரி சமயங்களில் சாதகமான ஒன்றுதான். அந்த ஓட்டை வழியே சிஸ்டோஸ்கோபி கருவியிலேயே பிரத்யேகமாக இணைக்கப்பட்ட மெல்லிய சிறு குழாய் வழியாக குழந்தையின் இரைப்பைக்குள் துளித்துளியாக சலைன் திரவம் செலுத்தினோம்.
இதனால் குழந்தையின் இரைப்பை சற்று விரிவடைந்து, சிஸ்டோஸ்கோபிக் கருவி பின்னை இயல்பாக கவ்விப்பிடிக்க வசதியாக இருந்தது. இருப்பினும் உச்சகட்டமாக வேறு எந்த உறுப்பு களுக்கும் பாதிப்பின்றி கருவியின் மூலம் பின்னை எடுக்கும் முயற்சி எங்களுக்கு சவாலாக இருந்தது.
கிட்டதட்ட 45 நிமிட போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக சிஸ்டோஸ்கோபிக் கருவி, சேப்டி பின்னை லாவகமாக பிடித்துக்கொண்டது. அதை பாதுகாப்பாக வெளியே எடுத்தோம். அந்த 45 நிமி டங்களும் எங்கள் மருத்துவக்குழுவிற்கு பரபரப் பாக கழிந்தது. இப்போது குழந்தை நலமாக இருக்கிறாள். கொஞ்சம் ஓய்வுக்குப்பிறகு அவள் சகஜமாகிவிடுவாள்” என்று சொல்லி முடித்தார்.
பேபி ஆஸ்பிடல் என்று அழைக்கப்படுகிற அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நிகழ்த்தப் பட்ட இந்த அறுவை சிகிச்சை, தனியார் மருத்து வமனையில் செய்யப்பட்டிருந்தால் அதற்கான விலை கணிசமாக இருந்திருக்கலாம்.
“பொதுவாக குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களது சுபாவம் இயல்புக்கு மாறானது. பெற்றோர்கள் அதை எளிதில் புரிந்து கொள்ள வேண்டும். வீடு களில் குழந்தைகளின் கைகளில் எட்டும் அள வுக்கு பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். துருத்தி தெரிகிற, தன்னை ஈர்க்கிற பொருட்கள் அது நல்லதோ கெட்டதோ எதுவானாலும் அதை பார்க்கவும், தொடவும் அவர்கள் விரும்புவார்கள். அதனால் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளின் மீதான கவனம் பெற்றோரிடம்தான் கூடுதலாக இருக்க வேண்டும். இல்லையேல் இம்மாதிரி அனுபவத்தை பெறநேரிடும்” என எச்சரித்து பேசுகிறார் மருத்துவமனையின் பதிவாளர் மருத்துவர் சீனிவாசன்
ஏழைகளுக்கு இரண்டாவது கடவுள் மருத்துவர்கள்தான்; அதில் சந்தேகமில்லை. மருத்துவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!