முன்னாள் பெண் போராளி தீயில் கருகி மரணம்

முன்னாள் பெண் போராளி ஒருவர் தீயில் எரிந்து சிகிச்சை பயனளிக்காது யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்.சுண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி உழவனுார் தம்பிராசபுரம் பகுதியை
வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்குமார் லோஜினி (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 3ம் திகதி அப் பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றினுள் தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டதாக அவரது கணவன் மரண விசாரணையில் கூறியுள்ளார்.
தீ பிடித்த பின்னர் அவர் தானாகவே ஓட்டோவை பிடித்து வைத்தியசாலைக்குச் சென்றார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், எரிகாயமடைந்து வாய் பேசமுடியாதிருந்த அவரிடம் யார் தீ மூட்டியது என்று கேட்ட போது, தலையை அசைத்து கணவரைக் காட்டி அவரே தீ மூட்டியதாக வைத்தியசாலையில் கூறியுள்ளார் என்று உயிரிழந்தவரின் சகோதரி மரணவிசாரணையில் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை அழைத்து வரவா என்று கேட்ட போது வேண்டாம் என்றும் தலையால் அசைத்துக் காட்டியுள்ளார் என்றும் அவர் மரணவிசாரணையில் கூறினார். தீயில் எரிந்ததானாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று உடற் கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.