வவுனியா, பகுதியில் 8 வயது சிறுவன் மீது வயரினால் தாக்குதல்

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் மீது ஒருவர் வயர் ஒன்றினால் அடித்ததால் உடலில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைகாக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவருக்கு அச்சிறுவனின் உறவு முறை நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை வயரினால் அடித்ததால் உடலில் காயமடைந்த சிறுவன் கத்திக்கொண்டு வீட்டு அருகில் உள்ள பற்றைக்குள் ஓடி ஒளித்துள்ளான்.
இதனை அவதானித்த அப் பகுதி மக்கள் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஆகிய எனக்கு தெரியப்படுத்தியதையடுத்து நான் அவ்விடத்திற்கு சென்று சிறுவனை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல முற்பட்டபோது சிறுவனின் தாயாரும் வேறு சிலரும் எனக்கும் நாம் பயணித்த ஆட்டோ சாரதிக்கும் தகாத வார்த்தைகளால் பேசி சிறுவனை கொண்டு செல்லவிடாது முரண்பட்டனர்.
இருப்பினும் மக்களின் உதவியுடன் சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதேவேளை, குறித்த சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தாயாருடன் சிறுவன் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.