இன்று திறந்து வைக்கப்பட்ட யாழ் வலி. மேற்கு பிரதேச சபையின் புதிய நூலகம்

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.30
மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் சங்கானை அரசடி வைரவர் ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் மாவை சேனாதிராசா சரஸ்வதியின் உருவச்சிலையை திரைநீக்கம் செய்ததுடன் 5.2 மில்லியன் ரூபா சபை நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்விற்கு கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், அர்னோல்ட், விந்தன் கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.